Sunday, September 17, 2017

18. பதினைந்தாவது சர்க்கம் - சீதையைக் கண்டார்!

சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்தபடி சீதை எங்காவது தென்படுகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்த ஹனுமான் அந்த அசோக வனத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

கற்பகக் கொடிகளும், பிற மரங்களும் அந்த இடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தன. அங்கே இதமான தென்றல் வீசிக் கொண்டிருந்தது. 

மரங்களும், செடிகளும் அளவாக வெட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்த அந்த வனம் தேவலோகத் தோட்டமான நந்தவனத்துக்கு ஒப்பானதாக இருந்தது.

அந்த வனத்தில் மிருகங்களும், பறவைகளும் நிறைந்திருந்தன. மனிதர்கள் தங்குவதற்கான குடில்களும் இருந்தன. குயில்களின் இனிய குரல் அந்த வனம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அங்கிருந்த குளங்களில் தங்க நிறத் தாமரைகளும் மற்ற பூக்களும் மலர்ந்திருந்தன. அந்த வனத்தில் அலங்கரிப்பட்ட ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், கம்பளங்களும் விரிக்கப்பட்டிருந்தன. பூமிக்குக் கீழேயும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த பல மரங்கள் எல்லாப் பருவங்களிலும் பூக்களையும், பழங்களையும் கொடுக்கக் கூடியவை. பூக்கள் மற்றும் பழங்களின் எடையினால் பல மரங்களின் கிளைகள் கீழே சாய்ந்து தரையைத் தொட்டுக் கொண்டிருந்தன.

அசோக வனம் என்றால் சோகத்தைப் போக்கக் கூடிய வனம் என்ற பொருளுக்கு ஏற்ப, அந்த வனம் மனிதர்களின் மனத்துயர் அனைத்தையும் போக்கக் கூடியது.

கர்ணிகாரா போன்ற மரங்கள் பூத்துக் குலுங்கி அந்த வனத்தை அழகுபடுத்தின. அந்த மரங்களில் பூத்துக் குலுங்கிய பூக்களின் ஒளியினால் அந்த வனம் சூரிய ஒளியால் பிரகாசிப்பது போல் பிரகாசித்தது.

பல மரங்களின் கிளைகளிலிருந்து பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்ததால் பல மரங்கள் இலைகள் இல்லாமல் பூக்கள் மட்டும் நிறைந்தவையாகக் காணப்பட்டன. 

சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்தபடி ஹனுமான் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த மரங்கள் அந்த இடத்தையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தன. புன்னாகம், சப்தபர்ணம், சபகம், உத்தாலகம் போன்ற மரங்கள் அகலமான அடிப்பகுதியைக் கொண்டிருந்தன. 

அங்கிருந்த ஆயிரக்கணக்கான அசோக மரங்களில் சில பொன்னிறத்திலும், சில தீக்கொழுந்துகளைப் போன்ற பிரகாசத்துடனும், சில மை போன்று கருத்தும் இருந்தன.

பல தோட்டங்களை உள்ளடக்கிய அந்த அசோக வனம் இந்திரனின் தோட்டமான நந்தவனம் போலவும், குபேரனின் தோட்டமான சைத்ரரதம் போலவும் இருந்தது.

அந்த வனத்தின் அழகையும் தனித்தன்மையையும் முழுமையாக விவரிக்க இயலாது. நட்சத்திரங்கள் நிறைந்த வானம் போல் விளங்கியது பூக்கள் நிறைந்த அந்த அசோக வனம். 

பூக்கள் என்னும் நவரத்தினங்களைக் கொண்ட ஐந்தாவது சமுத்திரம் அது என்றும் கூறலாம்.

எல்லாக் காலங்களிலும் பூத்துக் குலுங்கும் மரங்கள், நறுமணத்தைத் தாங்கி வரும் தென்றல், விதவிதமாக ஒலியெழுப்பும் மான்கள், பறவைகள், எங்கும் நிறைந்திருக்கும் இனிமையான மணம் இவையெல்லாம் சேர்ந்து அந்த வனத்தை இன்னொரு கந்தமாதன மலை போல் தோன்றச் செய்தன.

அந்த அசோக வனத்தின் நடுவில், ஆயிரம் தூண்களைக் கொண்ட ஒரு கோயிலை ஹனுமான் கண்டார். விண்ணை முட்டும் உயரத்துடன் ஒரு மேடான பகுதியில் அமைந்திருந்த அந்தக் கோயில் கைலாச மலையைப் போல் வெண்மை நிறத்தில் இருந்தது. 

அதன் படிகளில் முத்துக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதன் தரை பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தது, பார்ப்பவர்களின் கண் கூசும் அளவுக்குப் பிரகாசமாக இருந்தது அந்தக் கோவில்.

அங்கு, அழுக்கடைந்த ஆடையுடன், உணவருந்தாததால் இளைத்த உடலுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். 

சுற்றிலும் ராட்சஸப் பெண்கள் அமர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், அந்தப் பெண் நீண்ட பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்தார்.

சுக்லபட்சத்தின் (அமாவாசைக்குப் பின் வரும் பதினைந்து நாட்கள் அடங்கிய காலம்) முதல் நாளில் வானில் தோன்றும் சந்திரன் போல் இருந்தது அவர் தோற்றம். 

புகையால் மறைக்கப்பட்டிருக்கும் நெருப்பின் ஜுவாலை போல் மறைந்து காணப்பட்ட அவர் அழகை, உற்று நோக்கினால்தான் உணர முடியும்.

அவர் அழுக்கடைந்த மஞ்சள் நிற ஆடை உடுத்தியிருந்தார். நகைகள் எதுவும் அணியாமலும், தூசு படர்ந்தும் இருந்த அவர் உடல், பூக்கள் இல்லாத தாமரைக்குளம் போல் தோற்றமளித்தது.

துக்கத்தினாலும், அவமானத்தினாலும் அழுத்தப்பட்டவராக அவர் காணப்பட்டார். ஒரு தவசியைப் போல் பற்றற்ற நிலையில் இருப்பது போல் அவர் காணப்பட்டார். 

செவ்வாய் கிரகத்தால் அச்சுறுத்தப்பட்ட ரோகிணி நட்சத்திரத்தைப் போல் அவர் தோன்றினார். அவரது ஆழ்ந்த துயரை வெளிப்படுத்தும் வண்ணம் அவர் கண்களில் நீர் மல்கி இருந்தது.

உணவு உட்கொள்ளாததால் இளைத்திருந்த அவர், சோகம், பயம், விரக்தி ஆகிய உணர்வுகளால் பீடிக்கப்பட்டவராக இருந்தார். 

அவரைச் சுற்றி அரக்கர்கள் மட்டுமே இருந்ததால், தனக்கு ஆதரவாக ஒருவர் கூட அருகில் இல்லாத நிலையில், அவர் துயரத்தில் ஆழ்ந்திருந்தார். 

தன் கூட்டத்திலிருந்து பிரிந்து விட்ட மான் ஒன்று ஓநாய்களால் சூழப்பட்டது போல் இருந்தார் அவர்.

அவரது முதுகின் மேல் கருநாகம் போல் நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்த அவரது தலைமுடி, இலையுதிர் காலத்தில் பசுமையான இலைகளுடன் விளங்கிய மரங்களின் வரிசை போல் இருந்தது. 

சிறப்பாக வாழ வேண்டிய, அழகிய கண்களுடைய அந்தப் பெண்மணி துயரினால் வாட்டப்பட்டு, எலும்பு தெரிய இளைத்து கலைந்த தோற்றத்துடன் இருந்ததை ஹனுமான் கண்டார்.

தான் விரும்பிய உருவத்தை எடுத்துக் கொள்ளும் சக்தி பெற்ற ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது இருந்த அதே தோற்றத்துடன் இருந்ததால் அவர் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தார் ஹனுமான்.

அவர் முகம் முழுநிலவு போல் இருந்தது. அவரது இமைகள் அழகாக இருந்தன. அவரது மார்பகங்கள் எடுப்பாக இருந்தன. அவருடைய ஒளி மிகுந்த தோற்றம் சுற்றியிருந்த இருளை அகற்றியது. 

அவரது தலைமுடி கருமையாக இருந்தது. அவர் உதடுகள் பிம்பப் பழம் போல் தோற்றமளித்தன. அவர் இடை மிக அழகாக இருந்தது. அவர் கண்கள் தாமரை இதழ்கள் போல் இருந்தன.

கலப்பையால் நிலத்தை உழுதபோது ஏற்பட்ட பள்ளத்திலிருந்து தோன்றிய அவர் மன்மதனின் துணைவி ரதி போன்ற தோற்றத்துடன் அனைவரையும் கவரும் தோற்றம் கொண்டவராக இருந்தார். 

அவர் மேனி சந்திரனின் மென்மையைக் கொண்டிருந்தாலும், அது புலன்களை அடக்கிக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டவரின் மேனி போல் தோற்றமளித்தது.

தரையில் அமர்ந்தபடி, சோகத்தினாலும், பயத்தினாலும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததால், அவர் நாக லோகத்து இளவரசி போல் தோன்றினார்.

புகையினால் நெருப்பின் ஜ்வாலைகள் மறைக்கப்படுவது போல் அவரது பிரகாசம் அவரது ஆழமான, நாள்பட்ட சோகத்தினால் மறைக்கப்பட்டிருந்தது.

கடினமான உட்பொருளைக் கொண்டிருந்ததால், சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் போன சாத்திரம் போலவும், ஏழ்மையினால் கவரப்பட்ட செல்வம் போலவும், தேய்ந்து போன நம்பிக்கை போலவும், அடக்கிக் கொள்ளப்பட்ட ஆசைகள் போலவும், தோல்வி பயத்தினால் அழுத்தப்பட்ட வெற்றி போலவும், குழப்பமான சிந்தனைகளினால் மங்கிப் போன அறிவு போலவும், அவதூறுகளால் பாதிக்கப்பட்ட நற்பெயர் போலவும் அவர் தோற்றமளித்தார்.

ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சோகத்தினால் மிகவும் இளைத்திருந்த அவர் ராமருக்கு அருகில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்தினால் பீடிக்கப்பட்டவராக இருந்தார்.

தனியாக மாட்டிக் கொண்டு, எங்கு போவதென்று தெரியாமல் இங்கும் அங்கும் பார்வையைச் செலுத்தும் மான் போல் தோற்றமளித்த அவர் நீர் நிரம்பிய கருநிறக் கண்களுடனும், வில் போன்ற பருவங்களுடனும் நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது அவரது துயரை வெளிக்காட்டியது.

ஆபரணங்களுடன் துலங்க வேண்டிய அவர் உடல், ஆபரணங்கள் ஏதும் இல்லாமல், தூசும் அழுக்கும் படர்ந்ததாக இருந்தது .மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரன் போல் இருந்தார் அவர்.

மேலே விவரிக்கப்பட்டது போல் இருந்த சீதையைக் கண்ணால் கண்ட பின்பும் ஹனுமானுக்கு அவர் சீதைதானா என்ற ஐயம் இருந்தது.

அடிக்கடி ஒதாததால் சரியாக நினைவில்லாமல் போன வேத மந்திரம் போல் இருந்தார் அந்தப் பெண்மணி. 

ஒரு வாக்கியத்துக்கு விளக்கம் கூறும் வாக்கியங்கள் அந்த வாக்கியத்தின் பொருளைத் தவறாகக் கூறினாலோ, இலக்கணத்தை மீறினாலோ, அந்த வாக்கியத்தில் உள்ள அலங்காரச் சொற்களைக் குறிப்பிடாமல் போனாலோ அந்த வாக்கியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது போன்ற நிலையில் இருந்தார் ஹனுமான்.

அழகிய தோற்றம் கொண்ட அந்த ராஜகுமாரியைக் கூர்ந்து கவனித்த பின், பின்வரும் அடையாளங்களைக் கொண்டு, அவர் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற இறுதியான முடிவுக்கு வந்தார் ஹனுமான்

சீதையைக் கண்டு பிடிக்க உதவும் வகையில் ராமர் குறிப்பிட்டுச் சொன்ன ஆபரணங்களின் பிரகாசத்தை அவர் கவனித்தார்.

"இவர் அணிந்திருக்கும்  இந்த ஆபரணங்களால் சீதையை அடையாளம் காணலாம் என்று ராமர் என்னிடம் கூறியிருக்கிறார். நீண்ட நாட்களாக அவர் உடலிலேயே இருப்பதால் இந்த ஆபரணங்கள் அவர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

"அவர் கைகளிலும் விரல்களிலும் அணிந்திருக்கும் முத்துக்களாலும் பவளங்களாலும் செய்யப்பட்ட ஆபரணங்கள் கருத்திருக்கின்றன. 

"அவர் காதுகளில் தொங்கும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தொங்கட்டான்களையும், ஸ்வதம்ஷ்டிரா என்ற காதணிகளையும் என்னால் காண முடிகிறது.

"ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, ரிஷ்யமுக மலையில் அவரால் கீழே போடப்பட்ட ஆபரணங்கள் அவர் உடலில் இல்லை. அவை நீங்கலாக மற்ற ஆபரணங்கள் அவர் உடலில் இருக்கின்றன.

"அவருடைய தங்க நிற மேலாடை ஒரு மரத்தின் மீது விழுந்திருந்ததை சில வானரர்கள் பார்த்திருக்கிறார்கள். கீழே விழுந்திருந்த ஆபரணங்களை வானரர்கள் பார்த்திருக்கிறார்கள். 

"அவற்றை அவர்தான் கீழே போட்டிருக்க வேண்டும். நீண்ட நாட்களாக அணியப்பட்டிருப்பதால் அவர் உடை அழுக்குப் படிந்தும் மங்கியும் இருந்தாலும், அது கீழே விழுந்திருந்த மேலாடையின் நிறத்தை ஒத்த நிறத்தில்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

"அதனால் இந்தப் பெண்மணி, இன்னொருவனால் தூக்கிச் செல்லப்பட்ட பிறகும் ராமபிரானின் நெஞ்சிலிருந்து நீங்காமல் இருக்கும் தங்க நிற மங்கையான ராமரின் கற்புடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.

"இரக்கத்துடனும், அன்புடனும், துயரத்துடனும், ஒட்டுதலுடனும் ராமரால் எப்போதும் நினைத்துக் கொள்ளப்பட்டபடி இருக்கும் அந்தப் பெண்மணியாகத்தான் இருக்க வேண்டும் இவர். 

"தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய பெண் இன்னொருவன் வசத்தில் இருப்பதை நினைத்து ராமர் இரக்கம் கொண்டிருக்கிறார். தன்னை நம்பி இருப்பவர் என்பதால் ராமர் அவரிடம் அன்புடன் இருக்கிறார். தன் மனைவியைப் பிரிந்ததால் அவர் துயரத்துடன் இருக்கிறார். தனது அன்புக்குரியவர் என்பதால் அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.

"இவருடைய உடலுறுப்புகள் அத்தனையும்  அமைப்பிலும், அழகிலும் ராமரின் உடலுறுப்புகளுடன் ஒத்தவையாக இருக்கின்றன. ராமரின் உடலுறுப்புகள் இவருடையவையுடன் ஒத்திருக்கின்றன.

"இந்த தேவியின் மனம் ராமரைப் பற்றிய சிந்தனையில்தான் ஆழ்ந்திருக்கிறது, ராமரின் மனம் இவரது சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பது போல். அதனால்தான் இருவருமே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

"சீதையின் பிரிவுக்குப் பிறகும் சோகத்தினால் தன் உடல் சுக்குநூறாக உடைந்து விடாமல் ராமர் பார்த்துக் கொண்டிருக்கிறார். 

"இந்த அரிய செயல் அவரைத் தவிர வேறு யாருக்கும் இயலாத ஒன்று. சீதை இல்லாத நிலையில் தன் உயிரைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கும் ராமரின் சாதனை வேறு யாராலும் செய்ய முடியாதது."

சீதையை அடையாளம் கண்டு கொண்டதால் வாயுபுத்திரர்  மிகவும் உற்சாகம் அடைந்தார். ராமரை நினைத்து, அவரது பெருமையை உணர்ந்து அவர் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:






No comments:

Post a Comment