Saturday, April 18, 2015

11. எட்டாவது சர்க்கம் - புஷ்பக விமான வர்ணனை

அந்த அரண்மனையின் மையப் பகுதியில் ஆகாயத்தில் கட்டப்பட்ட மாளிகை போல் அமைந்திருந்த புஷ்பக விமானத்தை அந்த வானர வீரர் கண்டார்.

முத்துக்களாலும், வைரங்களாலும் அழகு செய்யப்பட்டிருந்த அந்த விமானத்தின் ஜன்னல்கள் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தால் கலையழகுடன் செய்யப்பட்டிருந்தன.

தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டிருந்த அந்த விமானத்தின் சக்தியை எவராலும் அளவிட முடியாது. அதை யாராலும் அழிக்கவும் முடியாது. அது போன்ற வேறு எந்த வாகனத்தையும் விஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அது உருவாக்கப்பட்டிருந்தது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அது அந்தரத்தில் நின்றது. அந்த விமானத்தால் எந்த இடத்துக்கும் செல்ல முடியும்.  

சூரியனுக்குச் செல்லும் பாதையில் ஒரு மைல்கல் போல் அது நின்றது. அதன் ஒவ்வொரு பகுதியும் மிகவும் திறமையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. எல்லாப் பகுதிகளுமே நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. 

தேவர்களிடம் இருந்த எந்தப் பொருளிலும் இல்லாத சிறப்புகள் அந்த விமானத்தில் இருந்தன. அதன் எல்லாப் பகுதிகளுமே வியப்பூட்டும் வண்ணம் இருந்தன.

அரிய தவத்தின் மூலமே பெறக்கூடிய எல்லா சக்திகளையும் கொண்டிருந்தது அந்த விமானம். அது எந்தத் திசையிலும் பறக்கக் கூடியது. அதில்  பிரமிக்க வைக்கும் அழகு கொண்ட அறைகள் இருந்தன. 

அதன் எல்லாப் பகுதிகளுமே சீராகவும் சிறப்புத் தன்மையுடனும் அமைக்கப்பட்டிருந்தன. தன் எஜமானனின் விருப்பத்துக்கேற்ப எங்கும் செல்லும் அந்த விமானத்தைக் காற்றால் கூடத் தடை செய்ய முடியாது. 

தேவர்களாலும், புனித வாழ்க்கை நடத்திய மனிதர்களாலும் மட்டுமே அடையக்கூடிய சொர்க்க லோகத்தை ஒத்திருந்தது அந்த விமானம்.

மலை உச்சிக்குச் செல்ல அமைக்கப்பட்டது போல் தோற்றமளித்த  சுழற்படிக்கட்டுகள் அதில் இருந்தன. இலையுதிர் காலச் சந்திரன் போல் அது தூய்மையான தோற்றம் கொண்டிருந்தது.  

அதில் விண் முட்டும் அளவுக்கு உயரம் கொண்ட பெரிய அரக்கர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த காதணிகளால் அவர்கள் முகம் ஒளி விட்டது. 

வசந்த காலத்தில் மலரும் பூக்களைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அந்த விமானத்தைப் பார்க்கும்போது ஏற்பட்டது.

இந்தப் பதிவின் காணொளி வடிவம் இதோ:



2 comments:

  1. மற்ற சர்க்கங்களை எப்போ போடுவீங்க? வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா சர்க்கங்களும் எழுதி முடிக்கப்பட்டு விட்டன. படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete